முகநூல் பக்கத்தில் பார்த்து காதலித்த வாலிபரை நேரில் பார்த்தபோது பிடிக்கவில்லை என்று கழற்றி விட்ட மாணவியுடன் தகறாரில் ஈடுபட்ட மாணவனை காவல்துறையினர் எச்சரித்து விரட்டியடித்தனர். 

முகநூல் பக்கத்தில் பார்த்து காதலித்த வாலிபரை நேரில் பார்த்தபோது பிடிக்கவில்லை என்று கழற்றி விட்ட மாணவியுடன் தகறாரில் ஈடுபட்ட மாணவனை காவல்துறையினர் எச்சரித்து விரட்டியடித்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவையில் உள்ள பெண்கள் கல்லூரி நேற்று காலை 9 மணி வாக்கில் வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பெண் அவரை சட்டை செய்யாமல் செல்வதும், கோபத்தில் அந்த வாலிபர் அப்பெண்ணைக் கல்லூரிக்குச் செல்ல விடாமல் தடுப்பதுமாக தகறாரில் ஈடுபட்டுள்ளனர். 

மாணவியுடன் தகராறில் ஈடுபடுவதை பார்த்த பொதுமக்கள் அந்த இளைஞரை தட்டிக் கேட்டுள்ளனர். அதற்கு அந்த வாலிபர், இது என்னுடைய தனிப்பட்ட பிரச்னை நீங்கள் யாரும் தலையிட வேண்டாம் என எடுத்தெரிந்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை பிடித்து தாக்கி கோவை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

அந்த வாலிபரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் திருவள்ளூரைச் சேர்ந்தவர் என்பதும், சம்மந்தப்பட்ட கல்லூரி மாணவியும், இவரும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகியதும் தெரிய வந்தது. அந்த நேரங்களில் வாலிபர் தன்னை ஆடம்பரமாகப் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளார். இதனால் மாணவிக்கு அவரது பந்தாவான புகைப்படங்கள் மனதில் பதிந்து கொண்டது.

இதனையடுத்து இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். நீண்ட நாட்களாக தொலைபேசியில் பேசி வந்த இருவரும் நேரில் சந்தித்து பேச விரும்பியுள்ளனர். அதற்காக நேற்று காலை மாணவி படிக்கும் கல்லூரி அருகே வந்திருக்கிறார் அந்த வாலிபர். முகநூலில் பார்த்த புகைபடத்துக்கும் நேரில் பார்த்ததற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்ததால் அதிருப்தி அடைந்த மாணவி வாலிபரைப் பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

இதனால் அந்த வாலிபர் மாணவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய வாலிபரை இனிமேல் மாணவிக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது எனக் கூறி போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.