மும்பையில் ஐ.ஏ.எஸ். தம்பதியின் மகன் தற்கொலை... போலீசார் விசாரணை
மும்பை மலைன் லைன்ஸ் பகுதியில் 18 வயது இளைஞர் ஒருவர் மலபார் ஹில் பகுதியில், டாரியா மகால் கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் ஒருவர் கூறுகையில்;
இன்று காலை 8 மணிக்கு டாரியா மகாலில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது. தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் பெற்றோருக்கு தகவல் அனுப்பப்பட்டது. இளைஞரின் பெற்றோர் இருவரும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாவர்.
அந்த இளைஞர் இன்று காலை சுமார் 7 மணியளவில் தனது நண்பர் வீட்டுக்கு செல்வதாகக் கூறி சென்றுள்ளார். பின்னர், தங்களது ஒரே மகன் தற்கொலை செய்தியை கேட்டதாக கூறியுள்ளனர்.
எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இளைஞர் தற்கொலை குறித்து மலபார் ஹில் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு தெரிவித்தார்.