"தேசிய கீதம் பாட மறுப்பவர்கள் தேச துரோகிகள்…" யோகி ஆதித்யநாத் அதிரடி
தேசிய கீதம் பாட மறுப்பவர்கள், குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் என்றும் அவர்கள் தேச துரோகிகள் என்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், லக்னோ ராஜ் பவனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்.‘‘வந்தே மாதரத்தை பாட மாட்டோம் என்று சிலர் கூறுகிறார்கள். நமது நாடு 21-ம் நூற்றாண்டை நோக்கி முன்னேற வேண்டும் என்று விரும்புகிறோம். நாம் வந்தே மாதரத்தை பாட வேண்டுமா, வேண்டாமா என்ற பிரச்சினை இங்குள்ளது. இது கவலையளிக்கும் விஷயம் என தெரிவித்தார்.
வந்தே மாதரம் முழக்கத்தை பாட சிலர் மறுக்கிறார்கள். அது அவர்களின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது. இந்த குறுகிய மனப்பான்மை கொண்டவர்களை சமாளிப்பதற்கான வழியை நாம் காண வேண்டும் என்று கடுமை காட்டிய அவர் அவர்கள் தேச துரோகிகள் என தெரிவித்தார்.
அண்மையில் அலகாபாத் மாநகராட்சி அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு சமாஜ்வாடி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனடிப்படையில்தான் யோகி ஆதித்யநாத் இப்படி பேசியுள்ளார்.