பெண்களுக்கு இதில் அதிக வாய்ப்பு வழங்கப்படும் - நிர்மலா சீதாராமன் தகவல்..!
ராணுவத்தில் அதிகளவில் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
முற்காலத்தில் பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்து வந்தனர். ஆனால் பரிணாம வளர்ச்சி மாற மாற பெண்களின் வளர்ச்சியும் மாறிக்கொண்டே வருகின்றது.
ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
அந்த வகையில், ராணுவத்தில் மருத்துவ சேவை உள்ளிட்ட சில பிரிவுகளில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
எல்லை பாதுகாப்பு போன்ற பணிகளுக்காக தற்போது வீராங்கனைகள் தயார்படுத்தப்பட்டு வரும் நிலையில், 3 வீராங்கனைகள் சமீபத்தில் போர் விமானிகளாகி சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில், ராணுவம் சார்பில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பணி வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் வரும் காலங்களில் ராணுவத்தில் அதிகளவில் பெண்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.