தாயை மீட்க, பிச்சை எடுத்த 7 வயது மகன்... மருத்துவ கட்டணம் செலுத்தாததால் மருத்துவமனையில் பெண்சிறை வைப்பு!
பிரசவ சிகிச்சைக்கான மருத்துவ கட்டணம் செலுத்த முடியாததால் ‘சிறை’ வைக்கப்பட்ட தாயை மீட்பதற்காக, அவருடைய 7 வயது மகன் தெருவில் பிச்சை எடுத்த அவலம் நிகழ்ந்துள்ளது.
பிரசவத்திற்காக
பீகார் தலைநகர் பாட்னாவில் தனியார் மருத்துவமனையில் லலிதா தேவி (வயது 31) என்ற பெண் கடந்த வாரம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
முதலில் லலிதா தேவியின் மருத்துவ கட்டணமாக 1.5 லட்சம் கட்ட சொல்லி மருத்துவ நிர்வாகம் அவருடைய குடும்பத்தாரிடம் கூறியுள்ளது.
ரூ.25 ஆயிரம் மட்டுமே..
பின்னர் முதலில் ரூ.75 ஆயிரம் ரூபாய் கட்ட சொல்லி தெரிவிக்கப்பட்டது. ஆனால் லலிதா தேவியின் கணவர் நித்யான் ராம் ரூ. 25,000 மட்டுமே செலுத்தி உள்ளார். மீதி பணத்தை கட்ட சொல்லி மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
மருத்துவமனையில் சிறை
முழு பணத்தையும் கட்டிய பிறகுதான் லலிதா தேவி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என கணவர் நித்யான் ராமிடம் மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால் லலிதா தேவி மருத்துவமனையில் ‘சிறை’ வைக்கப்பட்டார்.
பிச்சை எடுத்த மகன்
இதனால் லலிதா தேவியின் 7 வயது மகன் வேறு வழிதெரியாமல் தாயின் மருத்துவ கட்டணத்திற்காக தெருவில் பிச்சை எடுத்தான். இந்த சம்பவம் உள்ளூர் தொலைகாட்சியில் வெளியானது.
இதனை பார்த்த மதேபுரா எம்.பி. பப்பு யாதவ் இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த தாயையும் குழந்தையும் மீட்டார்.
மருத்துவமனைக்கு எதிராக புகார் செய்யப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.