மாத்திரை சாப்பிட குடிநீருக்கு பதில் ஆசிட் தந்த நர்ஸ்! பெண் துடி துடித்து பலி!
தனியார் மருத்துவமனையில் மாத்திரை போடுவதற்கு குடிநீருக்கு பதில் மருத்துவமனை நர்ஸ் ஒருவர் ஆசிட் தந்ததால் பெண் நோயாளி துடி துடித்து பரிதாபமாக பலியானார்.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள கோருல் கிராமத்தை சேர்ந்தவர் சியாமளி தேவி என்ற 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கண் ஆபரேஷன் நடந்தது. அதை தொடர்ந்து அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை சியாமளி தேவி மாத்திரை போடுவதற்காக மருத்துவமனை நர்சிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.
அவரும் அங்கிருந்த ஆசிட் பாட்டிலை தண்ணீர் பாட்டில் என நினைத்து எடுத்து கொடுத்துள்ளார். சியாமளி தேவியும் அந்த பாட்டிலை வாங்கினார். வாயில் மாத்திரைகளை போட்டுக்கொண்டு மளமளவென குடித்து விட்டார். இதைத்தொடர்ந்து, அலறித் துடித்த அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சியாமளி தேவி துடிதுடித்து பரிதாபமாக இறந்துபோனார்.
இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் மாத்திரை போடுவதற்கு குடிநீருக்கு பதில் கவனக்குறைவாக அங்கு யார் ஆசிட் பாட்டில் வைத்தது அதை என்னவெண்டு பார்க்காமல் தந்த மருத்துவமனை பணியாளரால், பெண் நோயாளி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.