மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலை ஒட்டி நடந்த வன்முறைகள் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு எதிராக தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்குவங்க மாநிலத்தில் பாஜக எம்பி லாக்கெட் சட்டர்ஜி இன்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலின்போது நடந்த பயங்கரம் குறித்து பேசுகையில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவர் கூறுகையில், 'எங்கள் மகள்கள் எந்த வெளிநாட்டிலும் வசிப்பவர்கள் இல்லை. அவர்களும் இந்நாட்டின் குடிமக்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பஞ்சாயத்து தேர்தலை ஒட்டி மாநிலத்தில் நடந்த அல்லது நடக்கும் தீவிரவாத சம்பவங்களால் மாநில பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மணிப்பூரில் நடந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு பலப்படுத்தப்பட வேண்டும் என்றார். பிரதமரே, எங்கள் பெண்களுக்காக ஏதாவது செய்யுங்கள். பஞ்சாயத்து தேர்தலில் பாஜக பெண் வேட்பாளர்கள் மீது வன்முறை சம்பவங்கள் நடந்தன. பஞ்சாயத்து தேர்தல் நாளில் பாஜக வேட்பாளர்களை திரிணாமூல்கட்சி தொண்டர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

” உங்களுக்கு வெட்கமே இல்லையா” மணிப்பூர் வீடியோவை கண்டித்த மம்தாவை காட்டமாக விமர்சித்த பாஜக

பஞ்சாயத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே மாநிலத்தில் அரசியல் பயங்கரம் தொடங்கியது. பாஜக வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. பல பாஜக வேட்பாளர்கள் தற்போது வீடு இல்லாமல் உள்ளனர்'' என்றார்.

மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தல் முடிந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். மணிப்பூர் எரிகிறது, இந்தியாவின் பெண்கள் எரிகிறார்கள் என்று குற்றம்சாட்டி இருந்தார். 

மணிப்பூர் வீடியோ: தீக்கிரையாக்கப்பட்ட முக்கிய குற்றவாளியின் வீடு!

''மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த சம்பவத்தை மன்னிக்க முடியாது. இந்த சம்பவம் நாட்டுக்கே அவமானம். குற்றவாளிகள் தப்பிக்க முடியாது'' என்று நேற்று நாடாளுமன்றம் துவங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக சாலையில் நடக்க வைத்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நேற்று முதல் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இதனால் ஏற்பட்ட அமளியால் திங்கள் கிழமை வரை இரண்டு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.