நாட்டில் தேர்தல் வரும் சமயம் அமலாக்க இயக்குனரகம், சிபிஐ, மத்திய விஜிலென்ஸ் ஆணையம், வருமான வரித் துறை போன்ற மத்திய அமைப்புகளை அரசியல் எதிரிகளுக்கு எதிராக பாஜக அரசு பயன்படுத்துகிறது. 

மத்திய பாஜக அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராடா வேண்டிய தருணம் இது என்று எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி

மேற்கு வங்காளத்தில் பிர்பூம் மாவட்டத்தில் மர்ம் நபர்களால் 8 பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு நெருக்கடி முற்றியிருக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் பாஜக வழிகாட்டுதலில் சிபிஐ செயல்படுவதாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீது பாஜக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தன்னுடைய அரசியல் எதிரிகளை குறிவைத்து அமலாக்க இயக்குனரகம், சிபிஐ, மத்திய விஜிலென்ஸ் ஆணையம் போன்ற மத்திய அமைப்புகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

ஒன்றிணைய அழைப்பு

பாஜகவின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிர்த்து முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து போரட வேண்டிய தருணம் இது. இதுபற்றி நாம் அனைவரும் ஒரு வழியை பற்றி விவாதிக்க கூட்டம் நடத்த வேண்டும். ஒவ்வொருவரின் வசதிக்கு ஏற்ப ஓரிடத்தில் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டத்தை நடத்தலாம். நாட்டில் தேர்தல் வரும் சமயம் அமலாக்க இயக்குனரகம், சிபிஐ, மத்திய விஜிலென்ஸ் ஆணையம், வருமான வரித் துறை போன்ற மத்திய அமைப்புகளை அரசியல் எதிரிகளுக்கு எதிராக பாஜக அரசு பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடன்தான் இந்த அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. எனவே, நாம் பாஜகவின் நோக்கத்தை எதிர்க்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்கள் மத்திய அமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஆளாவதில்லை.

நசுக்கப்படும் குரல்

எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தவேளையில் அமலாக்க இயக்குனரகம், சிபிஐ தலைவர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க பாஜக கொண்டு வந்த சட்டங்கள் உதவின. நீதித்துறையின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தற்போது சில பக்க சார்பாலும் அரசியல் தலையீடுகளாலும் மக்களுக்கு நீதி கிடைக்காமல் இருப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தாகும். நீதித்துறை, ஊடகம், அரசு நிர்வாகம் போன்றவை நமது ஜனநாயகத்தின் முக்கியமானத் தூண்கள். இதில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால், மொத்த அமைப்பும் குலைந்து போகும். அரசு சரியாக செயல்படுவதை உறுதி செய்வதையும் எதிர்க் குரல்கள் நசுக்கப்படுவதை எதிர்ப்பதையும் எதிர்கட்சிகளுக்கு அரசியலமைப்பு கொடுத்துள்ள பொறுப்புள்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.