தண்ணீர் வரி, கரண்ட் ‘பில்’ பாக்கி வைத்தால் தேர்தலில் போட்டியிட தடை - புதிய அதிரடி
குடிநீர் வரி, மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்து இருக்கும் நபர்களை சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும். அதற்கான சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதற்காக 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, இதுபோன்ற நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.
1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 3-வது பிரிவில் திருத்தம் கொண்டு வந்து, அரசுக்கு கட்டண பாக்கிகள் வைத்து இருப்பதை தேர்தல் குற்றமாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு பிறப்பித்த உத்தரவின்படி, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் தொகுதியில் குடிநீர், தொலைபேசி, மின்கட்டணத்தை அரசுக்கு பாக்கி வைக்கவில்லை என்ற சான்றிதழ் கட்டாயம் பெற உறுதி செய்ய கோரியது.
தேர்தலில் போட்டியிடுபவர்கள் அரசுக்கு எந்த விதமான கட்டண பாக்கியும் வைக்கவில்லை என்ற பிரமான பத்திரத்தையும் தாக்கல் செய்யக் கோரி 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து வலியுறுத்தியது.
மேலும் அரசு இல்லங்களில் குடியிருப்பவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவிதமான வாடகை பாக்கியும் வைக்கவில்ைல என்ற சான்றிதழையும் இணைக்கக் கோரியது. இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், தேர்தலில் போட்டியிடும் நபர்கள் அரசுக்கு எந்தவிதமான கட்டண பாக்கியும் நிலுவை வைக்ககூடாது என்று தீர்ப்பளித்தது.
இதையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம், தேர்தல் ஆணையம், அனைத்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. அப்போது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரசுக்கு எந்தவிதமான கட்டணம் பாக்கியும் வைத்திருக்க கூடாது என்றும், அவ்வாறு வைத்திருப்பது ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் வழிவகுக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியது குறிப்பிடத்தக்கது.