was ramar bridge constructed by man
பாம்பன் தீவு மற்றும் மன்னார் தீவுகளுக்கு இடையே இருக்கும் ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா? அல்லது இயற்கையாக உருவானதா? என்பது குறித்து இந்திய தொல்வியல் துறை மற்றும் இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் ஆகியவை ஆய்வு நடத்த இருக்கின்றன.
இந்த ஆய்வு அனேகமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் இருக்கலாம் எனத் தெரிகிறது.
“ராமர் சேது சோதனைத்திட்டம்” என்ற பெயரில் 15 முதல் 20 ஆய்வாளர்களுக்கு, 2 வார பயிற்சியை கடல்சார் தொல்லியல் ஆய்வாளர்கள் அளிக்க இருக்கிறார்கள்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முக்கிய ஆராய்ச்சி அமைப்பான இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள உள்ளது. எந்த அமைச்சகமும் இதில் ஈடுபடவில்லை.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்(B.C)4ம் நூற்றாண்டு முதல் முதலாவது நூற்றாண்டு வரை, துணைக்கண்டத்தில் உள்ள மக்களின் நாகரீகம் குறித்து புரிந்துகொள்வதற்கு இந்த ஆய்வு முக்கிய தொடக்கமாக அமையும்.

இந்த ஆய்வில் இருந்து கிடைக்கும் முடிவுகளைப் பொருத்து, அடுத்த கட்டமாக, குஜராத்தில் உள்ள துவராகவில் இதேபோல, அகல்வாராய்வுகள் மேற்கொள்ள இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
இந்திய வரலாற்று கவுன்சிலின் தலைவர் ஓய். சுதர்சன் ராவ் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
ராமர் சேது பாலம் இயற்கையாக உருவானதா? அல்லது மனதனால் கட்டப்பட்டதா? என்ற பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் உள்ளன. ஆதலால், அது குறித்து “ரிமோட் சென்சிங்” எனப்படும் செயற்கைக்கோள் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
மன்னார் தீவு மற்றும் ராமேஸ்வரம் தீவுக்கு இடையே தென் கிழக்காக உள்ள கடற்கரையில் சுண்ணாம்பு கல் பாறை ஒரு பாலம் போல் சங்கிலிபோல் அமைந்துள்ளது.
இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் பலவிதமான முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2002ம் ஆண்டு நாசா விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தில் கடலுக்குள் மனிதால் உருவாக்கப்பட்ட ஒருபாலம் அமைந்துள்ளதாகத் தெரிவித்தது. அதேசமயம், அது மணல்திட்டுக்களாகக் கூட 30 கி.மீ நீளத்துக்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியது.

2003ம் ஆண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலையில் “ரிமோட் சென்சிங்” பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.எம். ராமசாமி என்பவர் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில், ராமர் பாலம் என்பது வரலாற்று காலத்தில் மனதர்களால் உருவாக்கப்பட்டதற்கான தடயங்கள்இருக்கிறது என்று கூறியது.
2007ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், ராமர் பாலம் இருப்பதற்கான வரலாற்று ரீதியான ஆதாரங்கள் இல்லை என்றது.
2007ம் ஆண்டு ஜூன் மாதம்,சென்னை உயர்நீதிமன்றம் மேற்கொண்ட விசாரணையில், ராமர் பாலம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது. அந்த பாதையை இப்போது ஏன் சீரமைக்க கூடாது என மத்தியஅரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆதலால் இதுபோன்ற பல்வேறு முரண்பாடான தகவல்கள் இருப்பதால், அக்டோபர் ,நவம்பர் மாதங்களில், பல்வேறு ஆய்வாளர்கள், கடல்சார் நிபுனர்கள்,மாணவர்கள், ஆகியோர்கள் மூலம் ஆய்வு நடத்த உள்ளோம்.
இதுதொடர்பாக மே, ஜூன்மாதங்களில் பெருங்கடல் அகல்வராய்வு குறித்து பயிலரங்கம்நடத்த இருக்கிறோம்.
எங்கள் நோக்கம் ராமர் பாலம் என்பது இயற்கையாக உருவானதா அல்லது மனிதனால் வடிவமைக்கப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க, வரலாற்று ரீதியாக ஆய்வு மேற்கொள்வது மட்டும்தான். இதை ராமாயன கருத்துடன் ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
