பத்திரிக்கையாளர்களின் சரமாரி கேள்விகளுக்கு பதில் கூற மறுத்த விஜய் மல்லையா..!
பிரிட்டனில் இருந்து நாடு கடத்தக்கோரிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்கும்போது பதில் கூற முடியாமல் திணறினார். மேலும் அங்கிருந்து பதில் கூறாமல் காரில் ஏறி கிளம்பி சென்றார்.
இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாடு தப்பிச்சென்றார்.
பின்னர், அவர் மீது இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அவை அனைத்தும் நிலுவையில் உள்ளன.
வெளிநாடு தப்பி சென்ற விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
அதன்படி அவரை ஸ்காட்லாந்து போலீசார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை நாடு கடத்தக்கோரி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஆஜராக வந்த விஜய் மல்லையாவிடம் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதில் கூற முடியாத விஜய் மல்லையா திகைத்து பதில் தெரியாமல் திணறினார்.
பொதுமக்கள் முதலீடு செய்த பணத்திற்கு என்ன பதில் என அவர்கள் கேள்வி எழுப்பியதால் மல்லையா தர்ம சங்கடத்தில் சிக்கினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் அங்கிருந்து பதில் கூறாமல் காரில் ஏறி கிளம்பி சென்றார்.