குடியரசு துணை தலைவர் தேர்தல்... வெங்கையா நாயுடு வேட்பு மனு தாக்கல்!!
பாஜக சார்பில் குடியரசு துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் வெங்கய்யா நாயுடு வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
துணை குடியரசுத்தலைவர் திரு.ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், துணை குடியரசுத்தலைவர் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல், பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி, தேசிய காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட 17 கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி துணை குடியரசுத்தலைவர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற கோபாலகிருஷ்ண காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் பாஜக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட வெங்கையா நாயுடு, இன்று தேர்தல் ஆணையத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த அவர், தேர்தலில் போட்டியிடுவதையொட்டி நேற்று தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.