உ.பி. பேரவையில் வெடிபொருள்: என்.ஐ.ஏ. விசாரிக்க முதல்வர் பரிந்துரை...
உத்தரப்பிரதேச மாநில, சட்டப்பேரவையில் அதிபயங்கர வெடிபொருள் எனக் கூறப்படும் ‘பிளாஸ்டிக் எஸ்க்புளோசிவ்’ வகை வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது, இதன் மூலம் சட்டசபையையே தகர்க்க முடியும் என்று முதல்வர் ஆதித்யநாத் நேற்று சபையில் அறிவித்தார்.
இதையடுத்து, இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ.) விசாரணைக்குசபை ஒருமனதாக பரிந்துரை செய்தது.
உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக யோகிஆத்தியநாத் பதவி வகித்து வருகிறது. இப்போது சட்டப்பேரவையில் பட்ஜெட்கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 12-ந்தேதி சட்டப்பேரவையில் வழக்கமான சோதனையில் சபைக் காவலர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் ராம் கோவிந்த் சவுத்ரி இருக்கையின் அருகேவௌ்ளை காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு பொருள் இருந்தது. இதையடுத்து அந்த பொருளை கைப்பற்றி தடவியல் ஆய்வகத்துக்கு போலீசார் அனுப்பினர். அவர்கள் சோதித்த போது, மிக அபாயகரமான பிளாஸ்டிக் எஸ்க்புளோசிவ்(பி.இ.டி.என்) வகை வெடி பொருள் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து, நேற்று சட்டப்பேரவை அவசரமாகக் கூட்டப்பட்டது. அப்போது சபையில் முதல்வர் ஆதித்யநாத் பேசியதாவது-
எதிர்க்கட்சித் தலைவர் ராம் கோவித் சவுத்ரி இருக்கைக்கு அருகே இருந்து கைப்பற்றப்பட்ட பொருள் ஏதோ ரசாயனப் பவுடர் என நினைத்தோம். ஆனால், அதை ஆய்வு செய்ததில், அது மிகவும் சக்தி வாய்ந்த பி.இ.டி.என். வகை வெடிபொருள் எனத் தெரியவந்தது.
இதன் மூலம் சபையின் பாதுகாப்பு மிகவும் கவலைக்குரியதாக மாறி இருக்கிறது. இதன் மூலம் அபாயகரமான தீவிரவாதச் சதி இருப்பது வௌிவந்துள்ளது. இதை மத்திய அரசின் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இது குறித்து சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும்.
மாநிலத்தின் 22 கோடிமக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். எம்.எல்.ஏ.க்கள்சபைக்குள் செல்போன், பை ஏதும் கொண்டுவரக்கூடாது என்ற விதிமுறை கடைபிடிக்கப்பட வேண்டும். பாதுகாப்பு அமைப்புக்கும், தீவிரவாத தடுப்பு பிரிவுக்கும் இடையே போதுமான ஒத்துழைப்பு இல்லை. சபையின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவிதமான சமாதானமும் செய்யக்கூடாது. ’’ எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, பேசிய சபாநாயகர் ஹிரிதே நரேன் தீக்சித், “ சபையின் பாதுகாப்பு குறித்து அரசு கவலைகொள்கிறது. இது மிகவும் தீவிரமாக விஷயம். ஆதலால், ஒருமனதாக இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்த வெடிமருந்து வைக்கப்பட்டதன் பின்னணி சதி குறித்த உண்மை வௌி வரும்’’ என்றார்.
உ.பி. சட்டசபையில் கண்டுபிடிக்கப்பட்ட பி.இ.டி.என். எனப்படும் ‘பென்டாஎரித்திடோல் டெட்ராநைட்ரேட்’ வெடிபொருள் மிகவும் சக்தி வாய்ந்தது. 160 கிராம் எடையுடைய வெடிபொருள் சட்டசபையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உண்மையில் 500 கிராம் வெடிபொருள் இருந்தாலே சட்டசபையை தரைமட்டமாக்க முடியும் அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது.
கள்ளச்சந்தையில் கிடைக்கும் பி.இ.டி.என். வெடிபொருள், நைட்ரோ கிளிசரின் வகையைச் சேர்ந்தது. இதற்கு நிறங்கள் ஏதும் இல்லாததால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்பதால், இதை தீவிரவாதிகள் தான் அதிகமாக பயன்படுத்துவார்கள். இந்த வெடிபொருளை சிறிய டப்பாவில், அல்லது மின்னணு பொருட்களில் மறைத்து எடுத்துச் சென்றால்கூட வெடிமருந்து கண்டுபிடிக்கும் கருவியால் கண்டுபிடிக்க முடியாது.
எளிதாக பாதுகாப்பு கெடுபிடிகளை கடந்துவிடலாம். இந்த பிளாஸ்டிக்எஸ்க்புளோசிவ் வகை வெடிபொருள், பல நாடுகளில் பவுடராகவும், பிளாஸ்டிக்ஷீட்களாகவும் கிடைக்கும்.சட்டப்பூர்வமாக ராணுவத்தினர், சுரங்கத்தொழிலில் ஈடுபடுவோர் மட்டுமே இதை பயன்படுத்துவார்கள். இதை வேறு ஒரு வெடிபொருளுடன் சேர்ந்து பயன்படுத்தும் போது கடுமையான சேதத்தையும், விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.