அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட்... பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அடுத்தடுத்து அதிரடி!
16 மாநிலங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி அளிப்பதற்கான பாரத்நெட் சேவை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களின் கிராமங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பாரத்நெட் திட்டத்தின் மூலமாக இன்டர்நெட் வசதி செய்து கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 19 ஆயித்து 41 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தனியார் பங்களிப்புடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய மின் திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதே போல், மின் கட்டணங்களை செலுத்த ரீசார்ஜ் முறையைக் கொண்டு வரவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழி செய்வது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. புதிய மின் பாதைகள் மற்றும் புதிய துணை மின் நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.