உனக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதா.. சாதி மறுப்பு திருமணம் செய்த சூரிய பிரகாஷ் ஆணவ கொலை
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் துவாரபுடி கிராமத்தை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (41). உள்ளூரில் துணி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா. இவர் கோதாவரி மாவட்டத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தார். இருவரும் பள்ளியில் படிக்கும் போதே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
சாதி மறுப்பு திருமணம்
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் முன்னிலையில் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த சந்தியாவின் சகோதரர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். சாதி விட்டு சாதி திருமணம் செய்த சூரிய பிரகாஷை கொலை செய்ய சந்தியாவின் சகோதரர்கள் திட்டமிட்டனர்.
ஆணவக்கொலை
இதனிடையே திருமணம் முடிந்ததும் சந்தியாவை அழைத்துக்கொண்டு சூரியபிரகாஷ் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். இதை அறிந்த சந்தியாவின் சகோதரர்கள் சந்திரபால், கிரிபாபு ஆகியோர் நள்ளிரவு வீடு புகுந்து சூரியபிரகாஷை கடுமையாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தலையில் கல்லை தூக்கிப்போட்டுள்ளனர். இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இருவர் கைது
இதனையடுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்ற இருவரையும் அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். சாதி மறுப்பு திருமணம் செய்த துணி வியாபாரி கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

