Agnipath Protests: தீவிரமடையும் அக்னிபத் போராட்டம்... 3 ரெயில்களுக்கு தீ வைப்பு.. பீகாரில் பரபரப்பு...!
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் அக்னிபத் என்ற திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் மூுலம் ராணுவ பணியில் சேரும் வீரர்கள் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்படுவர். பணியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவேறியதும் பணி நீக்கம் செய்யப்படுவர். நான்கு ஆண்டுகள் பணியின் போது ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்கப்படும். இதுதவிர ஓய்வூதியம் மற்றும் கிராஜூவிட்டி போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படாது.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டமன்ற உறுப்பினரை நோக்கி தாக்குதல்:
பீகார் மாநிலத்தின் நவாடா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, அந்த வழியே பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் அருனா தேவி நீதிமன்றத்திற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோர், அருனா தேவியின் காரை தாக்கினர். இந்த தாக்குதலில் மொத்தம் ஐந்து பேர் காயமுற்றனர்.
“எனது காரில் பொருத்தப்பட்டு இருந்த கட்சி கொடியை பார்த்து போராட்டக்காரர்களின் கோபம் அதிகரித்து இருக்கலாம். இதன் காரணமாகவே அசதனை போராட்டக்காரர்கள் கொடியை அகற்றி உள்ளனர். எனது ஓட்டுனர், இரண்டு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் இரண்டு அதிகாரிகள் இந்த தாக்குதலில் காயமுற்றனர்,” என சட்டமன்ற உறுப்பினர் அருனா தேவி செய்தியாளர்கள் இடம் தெரிவித்தார்.
கடும் போராட்டம்:
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது சாலையில் நின்று கொண்டிருந்த காவல் துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் ரெயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ரெயில்கள் சேதமடைவதை பார்த்த போலீசார் துப்பாக்கியை காட்டி போராட்டக்ககாரர்கள் விரட்ட முயற்சித்தனர்.
பீகார் மாநிலத்தின் நவாடா, அரா, ஹிஜாபுர் போன்ற பகுதிகளில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. போராட்டத்திற்கு எதிராக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.