இந்தியாவின் பல மாநிலங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. ஹைதராபாத்தில் மழை பெய்தாலும், வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் வாட்டி வதைக்கும் வெயில்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. தலைநகர் டெல்லி, ராஜஸ்தான், தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் என பல்வேறு மாநிலங்களிலும் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. கடும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் வெளியில் வருதை தவிர்த்து வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். வீடுகளில் இருந்தாலும் புழுக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். தமிழகத்திலும் இதே நிலை தான் நீடிக்கிறது.
ஹைதராபாத்தில் மழை
இந்நிலையில் ஹைதராபாத் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பிற்பகலில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. பத்ராத்ரி கோத்தகுடேம், ஜங்கான், கம்மம், கோமுரம் பீம் ஆசிபாபாத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. அடுத்த இரண்டு நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் வாட்டி வதைக்கும் வெயில்! வெப்ப அலை எச்சரிக்கை! எங்கெல்லாம் வெயில் அதிகம்?
இந்திய வானிலை ஆய்வு மையம்
அதேபோல் ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, முழுகு, பத்ராத்ரி கொத்தகுடம், கம்மம், நல்கொண்டா, வாரங்கல், ஹனம்கொண்டா மற்றும் நாகர்கர்னூல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மின்னலுடன் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, முலுகு, பத்ராத்ரி கொத்தகுடெம், கம்மம், நல்கொண்டா, ரங்காரெட்டி, ஹைதராபாத், மேட்சல்-மல்காஜ்கிரி மற்றும் விகாராபாத் ஆகிய இடங்களிலும் இன்று இதேபோன்ற நிலை தான் என இந்திய வானிலை கணித்துள்ளது.
இதையும் படிங்க: வானிலை மையம் சொன்ன டேஞ்சர் அலர்ட்! மழைக்காகவா? வெயிலுக்காக? இதோ முழு தகவல்!
இரவில் இடியுடன் கூடிய மழை
அடுத்த இரண்டு நாட்களுக்கு, ஹைதராபாத்தில் ஓரளவு மேகமூட்டமான வானம் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அளவீடுகள் முறையே 38°C மற்றும் 25°C ஆக இருக்கும். மேலும் மிதமான வேகத்தில் தென்மேற்கு காற்று தொடரும். இதனிடையே வெப்ப அலை தீவிரமடைய வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு தெலுங்கானா மாவட்டங்களில், அடுத்த ஐந்து நாட்களில் வெப்பநிலை 41°C முதல் 44°C வரை இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
