கல்யாணவீட்டில் குத்து டான்ஸ் போட்ட மனைவி... கழுத்தை நெரித்து போட்டுத் தள்ளிய கணவன்!
கல்யாண வீட்டில் கலந்துகொண்ட மனைவி கணவன் கண்முன்னே நடனம் ஆடிய கோபத்தில் மனைவியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சுபீர் நஷ்கர். இவரது மனைவி சப்னா. இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆனது முதலே கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தங்களது உறவினர் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சுபீரும் சப்னாவும் சென்றுள்ளனர். திருமண விழாவில் சப்னா நடனமாடியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த சுபீர், சப்னாவை கண்டித்துள்ளார். அங்கேயே கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு சென்ற பின்னரும் இருவரும் சண்டை போட்டுள்ளனர். சுபீரின் தாயும் சப்னாவை கோபமாக கண்டித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே சுபீர், சப்னாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் மயக்கமடைந்த சப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து காவல் நிலையத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக சுபீர் புகார் அளித்துள்ளார்.
அவரது நடவடிக்கையின் மீது சந்தேகித்த போலீசார் அவரை தீவிரமாக விசாரித்துள்ளனர். அப்போது சுபீர் தன் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக் கொண்டான். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுபீரையும், அவரது தாயாரையும் கைது செய்தனர். நடனம் ஆடியதற்காக கணவனே மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.