மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில், தூக்கத்தில் துணியில் மலம் கழித்த 3 வயது சிறுவனை, அவனது தாயின் கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்துள்ளான். குழந்தை கீழே விழுந்ததாக நாடகமாடி, பின்னர் தப்பியோடிய கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில், தூக்கத்தில் துணியில் மலம் கழித்ததற்காக 3 வயது சிறுவனை அவனது தாயின் கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தூங்கிக்கொண்டிருந்த குழந்தை

கர்நாடக மாநிலம் விஜயபுரத்தைச் சேர்ந்த ஷாநாஸ் ஷேக் (28) என்பவர், தனது கணவரைப் பிரிந்து மௌலாலி (எ) அக்பர் ரசாக் (44) என்பவருடன் கடந்த ஒரு மாதமாக சோலாப்பூரில் வசித்து வந்தார். கடந்த டிசம்பர் 11-ம் தேதி இரவு, மதுபோதையில் இருந்த மௌலாலிக்கு அருகில் ஷாநாஸின் 3 வயது மகன் ஃபர்ஹான் தூங்கிக்கொண்டிருந்தான்.

அப்போது அந்தச் சிறுவன் தூக்கத்திலேயே தனது துணியில் மலம் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மௌலாலி, அந்தச் சிறுவனை சரமாரியாகத் தாக்கியதோடு, கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளான்.

திசைதிருப்ப முயன்ற கொலையாளி

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஷாநாஸிடம், குழந்தை தவறி கீழே விழுந்துவிட்டதாக மௌலாலி பொய் கூறியுள்ளார். உடனடியாகக் குழந்தையைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், நிலைமை மோசமாக இருந்ததால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, போலீசில் சிக்கிவிடுவோம் என்று பயந்த மௌலாலி, ஷாநாஸையும் குழந்தையையும் கர்நாடக மாநிலம் விஜயபுரத்திற்கு அழைத்துச் சென்றான். அங்குள்ள பேருந்து நிலையத்தை அடைந்ததும், அவர்களை அங்கேயே விட்டுவிட்டு மௌலாலி தப்பி ஓடிவிட்டான்.

பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த உண்மை

பின்னர், தனது முதல் கணவரின் உதவியுடன் ஷாநாஸ் குழந்தையை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அங்கு குழந்தையை ஆய்வு செய்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டதால்தான் உயிரிழந்தான் என்பது உறுதியானது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த சோலாப்பூர் போலீசார், தப்பியோடிய மௌலாலியைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர்.