பாடம் எடுத்தும் பயனில்லை…!!! – 77 ஓட்டுக்கள் செல்லாதவையாம்…
குடியரசு தலைவர் தேர்தலில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் அளித்த வாக்குகளில் 77 ஓட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கு வங்கம் முதலிடத்தை பிடித்துள்ளது.
குடியரசு தலைவர் தேர்தலில் 4,120 எம்.எல்.ஏ.க்களும், 7776 எம்.பி.க்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். சுமார் 99 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதனையடுத்து பதிவு செய்யப்பட்ட வாக்குகள் நாடாளுமன்றத்தின் முதல் மாடியில் எண்ணப்பட்டன. முடிவில் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதைடுத்து ராம்நாத் கோவிந்த் 14-வது குடியரசு தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக, ஒவ்வொரு மாநிலத்திலும், நாடாளுமன்றத்திலும், ஒருமுறைக்கு இருமுறை, அவர்கள் சார்ந்த கட்சிகளாலும், தேர்தல் ஆணையத்தாலும், குடியரசு தலைவர் தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என பாடம் எடுக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த முறையும் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு பாடம் எடுக்கப்பட்டன. ஆனால் இந்த முறை நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் 77 வாக்குகள் செல்லாத ஓட்டுகளாம்.
இதில் 21 பேர் எம்.பிக்கள் என தெரியவந்துள்ளது. ஓட்டு போட தெரியாதவர்கள் எம்.பிக்களாகவும், எம்.எல்.ஏக்களாகவும் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செல்லாத ஓட்டுக்களை போட்டதில் மேற்கு வங்கம் தான் முதலிடத்தில் உள்ளது.
6 டெல்லி எம்எல்ஏக்களும், மணிப்பூர், ஜார்க்ண்ட் மாநிலங்களில் தலா 4 எம்எல்ஏக்களும், உத்தரபிரதேசத்தில் 2 எம்எல்ஏக்கள் உட்பட 51 பேர் செல்லாத வாக்குகளை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.