The Pakistani army attacked the Kashmir border. A 9-year-old girl and a soldier killed her
காஷ்மீ்ர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் 9 வயது சிறுமி மற்றும் ராணுவ வீரர் ஒருவர் ஆகியோர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் வழியே செல்லும் இந்திய எல்லையில் ராணுவம், எல்லையோர கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் நடத்தியுள்ள தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் ரஜவ்ரி செக்டாரில் ராணுவ நிலைகளை குறிவைத்து நேற்று காலை 7.30-க்கு பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்த தொடங்கினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்திய வீரர்களின் பதுங்கு குழிகளை குறிவைத்து சிறிய ரக ராக்கெட் வெடிகுண்டுகளை பாகிஸ்தான் வீரர்கள் செலுத்தினர்.
இதில் ராணுவ வீரர் முதாசர் அகமது படுகாயம் என்பவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஷகீனா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், முதாசர் அகமது வீர தீரமும், நாட்டுப் பற்றும் மிக்கவர். அவர் தனது பணியை மிகவும் விரும்பிச் செய்தார். அவரது தியாகத்தை நாடு என்றைக்கும் மறக்காது என்றார்.
இதற்கிடையே எல்லையோர கிராமங்களான பாலகோட், மஞ்சாகோட் மற்றும் பரோடி ஆகியவற்றின் மீது சிறிய ரக ராக்கெட் குண்டுகளை பாகிஸ்தான் வீரர்கள் செலுத்தினர். இதில் பரோடியை சேர்ந்த 9 வயது சிறுமி சஜாதா ஹவுசர் என்பவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து மஞ்சாகோட், பாலகோட் பகுதியி்ல் உள்ள பள்ளிகள் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் தொடர் தாக்குதலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
