மூத்த பெண் பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளி கைது.
பிரபல கன்னட பெண் பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவர் லங்கேஷ் பத்திரிகாவின் எடிட்டர். பல சமுதாயப் பிரச்சனைகளை பத்திரிக்கையில் துணிகரமாக எழுதியவர் கெளரி லங்கேஷ்.
கெளரிலங்கேஷ் பா.ஜ.க பற்றி தனது பத்திரிக்கையில் பல முறை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதனால் இவர் படுகொலை செய்யப்பட்டதற்கும் பா.ஜ.கவிற்கும் சம்பந்தம் இருக்கிறது, என்ற ரீதியில் அப்போது செய்திகள் வெளியாகி இருந்தது.
அதன் பிறகு நடைபெற்ற போலீஸ் விசாரணையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் முக்கிய குற்றவாளியை கண்டறிந்தனர் கர்நாடக போலீசார். இந்த வழக்கு தொடர்பாக பிரவீன் என்பவரை மார்ச் 3ம் தேதி அன்று போலீசார் கைது செய்தனர். அவரை விசாரித்ததில் நவீன் குமார் என்பவரும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதை அறிந்த போலீசார், இப்போது நவீன் குமாரை கைது செய்திருக்கின்றனர்.
ஆனால் இந்த கொலை வழக்கின் முழு விவரமும் பிரவீனுக்கு தான் தெரியும், நவீன் சில நாட்கள் மட்டுமே அவருடன் இருந்ததால் அவருக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை. எனவும் தெரிவித்திருக்கின்றது காவல் துறை. மேலும் இந்த கொலையின் பின்னணியில் இருக்கும் நபர் யார்? என்பதை தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.