அய்யோ...ரெயிலில் இதைக் கூடவா திருடிட்டு போவாங்க! அறிமுக நாளிலேய அதிகாரிகள் புலம்பல்..
உத்தரப்பிரதேசம் வாரணாசி முதல் குஜராத்தின் வதோதரா வரை இயக்கப்பட்ட மகாமனா எக்ஸ்பிரஸ், சொகுசு ரெயிலில் பயணித்த பயணிகள் அறிமுக நாளிலேயே அதிகாரிகளை புலம்ப வைத்துள்ளனர்.
வாரணாசி முதல் வதோதரா வரை அதிநவீன சொகுசு எக்ஸ்பிரஸ்ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த வௌ்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்திய ரெயில்வேயின் தோற்றத்தை மாற்றும் வகையில் இந்த ரெயிலில் பல நவீன வசதிகள் பயணிகளுக்கு செய்து தரப்பட்டுள்ளன.
அதிநவீன கழிவறை, கழிவறையில் மிகப்பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி, வாஷ்பேஷின், தண்ணீர் குழாய், கழிவறையில் துற்நாற்றத்தை போக்கும் கருவி, எக்சாஸ்ட் பேன், எல்.இ.டி. விளக்குகள், குப்பைத் தொட்டிகள், அதிக சொகுசு கொண்ட படுக்கை, இருக்கைகள், ஜி.பி.எஸ். வசதிகள் என பலவிதமான வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
மேற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்படும் ‘மகாமனா எக்ஸ்பிரஸ்’ ரெயில் தனது முதல் பயணத்தை நேற்றுமுன்தினம் வாரணாசியில் இருந்து தொடங்கியது. அதில் ஏராளமான பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர். அந்த ரெயில் வதோதரா வந்து சேர்ந்தவுடன் முதல் பயணத்தில் வந்த பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் வரவேற்றனர்.
அதன்பின், தான் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
ரெயிலை சுத்தம் செய்ய ஊழியர்கள் சென்ற போது, அங்கு இருந்த அலங்கோலக் காட்சியைப் பார்த்து தூக்கிவாறிப்போட்டது. அதன் பின் அலறியடித்து வந்து அதிகாரிகளிடம் ஊழியர்கள்் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அதிகாரிகள் சென்று பார்த்தபோது, ஏராளமான கழிவறைகளில் தண்ணீர் வரும் குழாய், குளிக்கும் ஷவர் போன்றவை திருடப்பட்டு இருந்தது. எல்.இ.டி.பல்புகள் திருடப்பட்டு இருந்தன, புதிய இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டும், தரைவிரிப்பான்களும் திருடப்பட்டு இருந்தன. இதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மேற்கு ரெயில்வேயின் மக்கள்தொடர்பு அதிகாரி ரவீந்திர பக்கர் கூறுகையில், “ ஒவ்வொரு பயணிக்கும் அதிநவீன வசதிகளை உருவாக்கவே நாங்கள் முயற்சி செய்கிறோம். ஆனால் பயணிகள் சிலர் இதுபோல் ரெயிலில் உள்ள குழாய்களையும், ஷவர்களையும் திருடிச் செல்வது வேதனை அளிக்கிறது.
அவர்கள் தரைவிரிப்பான்களைக் கூட விடவில்லை. ஒட்டுமொத்த ரெயிலையும் சேதப்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் பொதுப்பெட்டிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது, நவீன வசதிகளை பயன்படுத்த பயணிகள் தகுதியாக இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது’’ என்று தெரிவித்தார்.