ஐ.எஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறை - டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிரபித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாகவும், ஆட்களை சேர்த்ததாகவும் அசார் அல் இஸ்லாம், முகமது பர்கான் ஷாயிக் மற்றும் அட்னன் ஹசன் ஆகியோரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றச்சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அசார் அல் இஸ்லாம், முகமது பர்கான் ஷாயிக் ஆகிய இருவரும் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
மேலும், திருந்தி வாழ விரும்புவதாக கூறினர். தொடர்ந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி இருவருக்கும் 7 ஆண்டு கடுங்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஹசன் மீதான வழக்கு இதே நீதிமன்றத்தில் தனியாக நடைபெறும் என அறிவித்தார்.