தேர்தலில் ஆர்வமோடு வாக்களித்த 105 வயது முதியவர்..! வாக்களித்த அரை மணி நேரத்தில் உயிர் இழந்த பரிதாபம்...
பஞ்சாயத்து தேர்தலில் அர்வமோடு வந்து வாக்களித்த 105 வயது முதியவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு அரை மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயக கடமையாற்றாத பொதுமக்கள்
வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை. தங்களின் பிரதிநிதிகளை தேர்வு செய்ய ஒருவர் வாக்களிக்கத் தவறினால் அது அவருக்கு வலியைத் தர வேண்டும். என்பது தேர்தல் நேரத்தில் பொதுமக்களுக்கு வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகமாகும், தேர்தலில் வாக்களிக்க அரசாங்கம் சார்பாக விடுமுறை வழங்கினால் போதும் அந்த விடுமுறையை வாக்களிப்பதை தவரித்து விட்டு குடும்பத்தோடு ஊர் சுற்ற கிளம்பிவிடுவார்கள் ஆனால் இவர்களுக்கு எல்லாம் எடுத்துகாட்டாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. தனது வாக்களிக்கும் கடமையை கட்டாயம் நிறைவேற்றியே ஆவேன் எனக்கூறி 105 வயது முதியவர் வாக்களித்து விட்டு உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
105 வயதில் வாக்களித்த முதியவர்
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அந்த பகுதியை சேர்ந்த 105 வயது முதியவர் வலன் சாஹூ நடக்க முடியாத நிலையிலும் வாக்களிக்க செல்ல முற்பட்டார். ஆனால் முதியவரின் உடல்நிலை பாதிப்பை கருத்தில் கொண்டு வீ்ட்டில் உள்ளவர்கள் வாக்களிக்க செல்ல வேண்டாம் கூறியுள்ளனர். ஆனால் இதனை ஏற்காத முதியவர் எனக்கு என்ன ஏற்பட்டாலும் கட்டாயம் வாக்களிக்க செல்வேன் என கூறியுள்ளார். இதனால் என்ன செய்வதென்று தெரியாத உறவினர்கள் காரை வாடகைக்கு அமர்த்தி வாக்களிக்க முதியவரை வாக்குசாவடிக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து வாக்குசாவடிக்கு சென்ற முதியவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
வாக்களித்த அரை மணி நேரத்தில் முதியவர் உயிரிழப்பு
இதனையடுத்து வீட்டிற்கு திரும்பிய முதியவர், திடீரென உயிர் இழந்துள்ளார். மதியம் 2.45 மணிக்கு வாக்குசாவடி சென்று வாக்களித்தவர், 3.10க்கு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்தது. வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை மக்களுக்கு புரிய வைத்து மறைந்த 105 வயது முதியவருக்கு அந்த பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.