சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்தான்! புகழாரம் சூட்டும் பிரபல வீரர்!
தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பாராட்டி உள்ளார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், அண்மையில் நடைபெற்ற இலங்கையுடனான டெஸ் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்த சாதனையை அவர் 54 போட்டிகளிலேயே எட்டினார்.
இதற்கு முன்னதாக 1981 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் டெனீஸ் லில்லி என்பவர் 56 போட்டிகளில் 300 விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது. ஆனால் அஸ்வின் 54 டெஸ்ட் போட்டிகளிலேயே 300 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
அஸ்வினின் இந்த சாதனை குறித்து உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரும், இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான முத்தையா முரளிதரன், பாராட்டி உள்ளார்.
முத்தையா முரளிதரன் 113 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 400, 500, 600, 700 மற்றும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையும் படைத்துள்ளார். இந்த நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை பாராட்ட நினைப்பதாக அவர் கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்துவது அவ்வளவு பெரிய காரியம் இல்லை. தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
அஸ்வின் தனது 30-களில் விளையாடிக் கொண்டிருக்கிறார். இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு அவர் விளையாடலாம். அதற்குள் முடிந்தவரை பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.