டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழக மாணவர் மர்ம மரணம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழக மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கல்வி நிறுவனங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தமிழக மாணவர்கள் மற்றும் தலித் மாணவர்களின் தற்கொலையும் மர்ம மரணமும் நீடித்து வருகிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரத் என்ற மாணவர், இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை கண்ட மற்ற மாணவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே சரத்தின் இறப்புக்கான காரணம், பின்னணி ஆகியவை குறித்து தெரியவரும்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பொது மருத்துவ படிப்பில் எம்.டி படித்த திருப்பூரை சேர்ந்த டாக்டர் சரவணனும் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.