தேச துரோக சட்டத்தை எதிர்த்த வழக்குகளை அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது

இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ் தேசத்துரோகத்தின் காலனித்துவ கால விதியின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிகளை நாடாளுமன்றம் மீண்டும் அமல்படுத்தும் பணியில் இருப்பதால், பெரிய அமர்வுக்கு மாற்ற வேண்டாம் என்ற மத்திய அரசின் கோரிக்கையை தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நிராகரித்தது.

மேலும், குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட பலம் பொருந்திய அரசியல் சாசன அமர்வை அமைப்பதற்கு நிர்வாகத் தரப்பில் தகுந்த முடிவுகளை எடுக்க ஆவணங்களை தலைமை நீதிபதியின் முன்பு சமர்ப்பிக்க உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வது தொடர்பான ஆலோசனையின் முக்கிய கட்டத்தில் இருப்பதாக மத்திய அரசு கூறியதை அடுத்து, இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 1ஆம் தேதி தள்ளி வைத்திருந்தது.

புதிய நாடாளுமன்ற ஊழியர்களுக்கு புதிய சீருடை!

இதனிடையே, காலனித்துவ கால குற்றச் சட்டங்களை மாற்றியமைப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய அரசு IPC, CrPC மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக மூன்று மசோதாக்களை மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆகஸ்ட் 11ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்தது.

அரசு மறு ஆய்வு செய்யும் வரை தேசத் துரோகச் சட்டத்தை கடந்த ஆண்டு மே 11ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்த விதியின் கீழ் புதிய எஃப்ஐஆர் எதையும் பதிவு செய்ய கூடாது என்றும் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதவிர, நடந்து வரும் விசாரணைகள், நிலுவையில் உள்ள விசாரணைகள் உள்பட நாடு முழுவதும் தேசத்துரோக சட்டத்தின் கீழ் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.