நாடாளுமன்ற பணியாளர்களுக்கான புதிய சீருடை உட்பட பல மாற்றங்களுடன், அடுத்த வாரம் முதல் அமர்வை நடத்த, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தயாராகி வருகிறது.  

டெல்லியில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடம் அமைந்துள்ளது. இந்த சூழலில் பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் டெல்லியில் 4 மாடிகளைக் கொண்ட ரூ.970 கோடி மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட நிலையில், கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடைபெறவில்லை. இந்த நிலையில், செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர், புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதனிடையே, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை பணியாளர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது. அவைப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கிரீம் நிற ஜாக்கெட்டுகள், இளஞ்சிவப்பு தாமரை அச்சிடப்பட்ட கிரீம் நிற சட்டைகள் மற்றும் காக்கி கால்சட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இரு அவைகளின் ஊழியர்களுக்கும் ஒரே சீருடைதான்.

புதிய சீருடைகள் அறை உதவியாளர்கள் உள்பட அனைத்து 271 ஊழியர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற பாதுகாப்பு சேவையின் (செயல்பாடுகள்) பாதுகாப்பு அதிகாரிகள் நீல நிற சஃபாரி உடைக்கு பதிலாக ராணுவ உடை போன்று அணிவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி மூலம் இந்த புதிய சீருடைக்கான டிசைன்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண், பெண் ஊழியர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடைகளே இருக்கும் எனவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

சனாதனத்திற்கு எதிராக பேசுவதா.! நாக்கை பிடுங்குவோம்... கண்ணை நோண்டுவோம்-உதயநிதிக்கு கஜேந்திர சிங் எச்சரிக்கை

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் போது சீருடையை வெளியிடும் திட்டம் இருந்ததாகவும், ஆனால், அது தாமதப்பட்டு விட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், கடந்த 6ஆம் தேதியே புதிய சீருடைகளை ஊழியர்கள் பெற்றுக் கொண்டு வைட்டனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கும் ஐந்து நாள் சிறப்பு அமர்வு தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் எனவும், செப்டம்பர் 19 அன்று விநாயக சதுர்த்தியன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிகிறது.

சிறப்பு அமர்வின் முதல் நாளில், இரு அவைகளும் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகவும், அடுத்த நாள், புதிய கட்டிடத்திற்கு அவை நடவடிக்கைகளை மாற்றுவதற்கு முன், மத்திய மண்டபத்தில் கூட்டுக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்த விவரம் அறிந்த தகவல்கள் கூறுகின்றன.