ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நடிகர் கமல் ஹாசனும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமியும் கடுமையாக மோதி கருத்துக்களை தெரிவித்தனர்.
அவதூறு
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இளைஞர்கள் மேற்கொண்ட போராட்டத்தை பாரதிய ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி கடுமையாக விமர்சித்தார். போராட்டம் நடத்தும் இளைஞர்களையும், மாணவர்களையும் ‘பொறுக்கிகள்’ என்று அவதூறாக டுவிட்டரில்பதிவிட்டு வந்தார்.
பதிலடி
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு விழாவில் கருத்து தெரிவித்த நடிகர் கமல் ஹாசன், “ நான் தமிழ்பொறுக்கிதான், ஆனால், டெல்லியில் போய் பொறுக்கவில்லை'' என்று பதிலடி கொடுத்து இருந்தார்
மேலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி குறித்து பேசிய கமல் ஹாசன், “ முதல்வர் பன்னீர் செல்வம் போராட்டக்காரர்களை சந்தித்து இருக்க வேண்டும்'' என்று கூறி இருந்தார்.
முட்டாள்தனமானது
இது குறித்து சுப்பிரமணிய சாமி டுவிட்டரில் நேற்று வெளியிட்ட கருத்தில், “ போராட்டக்காரர்களை முதல்வர் பன்னீர் செல்வம் சென்று சந்தித்து இருக்க வேண்டும் என்று கூறும்,
சினிமா நடிகர் கமல் ஹாசன் ஆலோசனை எவ்வளவு முட்டாள்தனமானது. மதுரைஅலங்காநல்லூருக்கு சென்று முதல்வர் போராட்டக்காரர்களைச் சந்தித்தார். அதனால் என்ன நடந்தது?'' என்று பதிவிட்டுள்ளார்.
அய்யோ,அய்யோ
மற்றொரு பதிவில், “ தமிழ் பொறுக்கிகள் என்னை மெரினாகடற்கரைக்கு வர துணிச்சல் இருக்கிறதா எனக் கேட்கின்றனர். கடவுள்(சிவா) போலீஸை மெரினாவுக்கு அனுப்பினார்.
பொறுக்கிகள் அய்யோ, அய்யோ என அலறிக்கொண்டே சென்றனர். இப்போது என்னை தமிழ்நாட்டுக்கு வருகிறாயா என பொறுக்கிகள் கேட்கிறார்கள்?. அதை கடவுள்தான் முடிவு செய்வார்.
மெரினாவில் இருந்த முஸ்லிம் போராட்டக்காரர்களுக்கு போலீசாரின் தடியடி மூலம் நல்ல செய்தி கொடுக்கப்பட்டு இருக்கிறது'' எனத் தெரிவித்தார்
மேலும், “ முதல்வர் ஒ.பன்னீர் 3 முக்கிய விசயங்களை செய்து இருக்கிறார். உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஜல்லிக்கட்டு நடத்தவிடவில்லை.
சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். பொறுக்கிகளை போலீஸ் மூலம் அடித்து விரட்டி இருக்கிறார்'' எனத் பதிவிட்டார்.

கமல் பதில்...
இதற்கு நடிகர் கமல் ஹாசன் பதில் அளித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ ஏய் சாமி. நான் தமிழ்நாட்டுக்காரன். முதல்வர்மட்டுமல்லாது,
அரசியல்வாதிகளும் மக்களை கண்டிப்பாக சந்தித்து இருக்க வேண்டும். அரசாள்பவர்கள் மக்களிடம் பணிந்துதான் செல்ல வேண்டும். அதில் ஏன் முதல்வர் செய்ய மறுக்கிறார்?'' என்றார்.
பதில்அளிக்கப்போவதில்லை
அடுத்து வெளியிட்ட பதிவில், “ சாமியின் அவதூறுகளுக்கு நான் பதில் அளிக்க போவதில்லை என முடிவு எடுத்துவிட்டேன்.
நீங்கள் அதிகார வர்க்கத்தில் இருக்கிறீர்கள். காமராஜர், அண்ணா, ராஜாஜிஎனது தந்தைகள். மோதி மிதித்து விடு பாப்பா'' என்று தெரிவித்தார்.
அமைதி
அதன்பின், “ அமைதி.. ஒரு பூடகமான சொல், அமைதி... அது பேசாதிருப்பதா?, செயலற்றிருப்பதா?; தமிழலில் எழுதினாலும் நாட்டுக்கே பொருந்தும் உலகுக்கே.. வெல் தமிழா'' என பதிவிட்டார்.
