Student - Teacher Atrocities
சக மாணவனுடன் பேசியதால் மாணவன் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிய ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம், நர்சிங்கி அருகே உப்பலகுடா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் பயின்று வருகின்றனர்.
உப்பலகுடாவை சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவனும், அந்த பள்ளியில் யூ.கே.ஜி. வகுப்பில் படித்து வந்தான். ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது, அந்த மாணவன், சக மாணவனோடு பேசியுள்ளான்.
இதனை ஆசிரியர் கண்டித்துள்ளார். ஆனாலும், மாணவன் தொடர்ந்து பேசியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த வகுப்பாசிரியை சிறுவனின் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டியுள்ளார்.
மாணவன் பள்ளி முடிந்த பிறகு, வீட்டுக்கு சென்றான். பின்னர், தான் பேசியதால் ஆசிரியை வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டியுள்ளது குறித்து தனது தாயிடம் கூறியுள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் தாய், ஆசிரியை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில் ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
