special wedding in andra

ஆந்திராவின் மேற்கு கோதாவரி பகுதியில் மணமகன் திருமணத்திற்கு முன் மணமகள் போலவும், மணமகள் மணமகன் போலவும் உடை மற்றும் ஆபரணங்களை அணிந்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த வினோத பழக்கம் ஒரு ராஜகுடும்பத்தில் இன்னும் நடைமுறையில் உள்ளது.

குதிரை வண்டியில்..

ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரியில் தடபள்ளிகுடெம் நகருக்கு உட்பட்ட ஜகன்னாதபுரம் என்ற கிராமத்தினை சேர்ந்தவர் ரவிதேஜா. இவர் வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் நடைபெற முடிவானது.

திருமணத்திற்கு முந்தைய தினம் அவர் மணமகள் போல் வேடமணிந்து குதிரை வண்டியில் சவாரி செய்து கிராமத்தினை வலம் வந்துள்ளார். அந்த பகுதி கிராம மக்களும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேபோல மணமகள் மணமகள் போன்று வேடம் அணிந்து வலம் வந்தார். அதன் பின் இவர்களின் திருமணம் நடந்துள்ளது. இந்த வினோத திருமணம் இவர்களின் பரம்பரையில் தொடர்ந்து வருகிறது.

பின்னணி வரலாறு

இதன் பின்னணி வரலாறு என்னவென்றால், “ காக்கத்திய பேரரசை ஆட்சி செய்து வந்தவர் ராணி ருத்ரமா தேவி. அவரது பாதுகாப்பு படையின் தலைவராக இருந்தவர் கன்னம நாயுடு.

அந்த குடும்பத்தின் மரபின்படி, ஆடவர் ஒருவருக்கு திருமணம் நடைபெற வேண்டுமென்றால், திருமணத்திற்கு முந்தைய தினம் அந்த மணமகன் நகை மற்றும் உடை ஆகியவற்றை மணமகள் போன்று அணிந்து கொள்ள வேண்டும். இது மணமகளுக்கும் பொருந்தும்.

குடும்ப வழக்கப்படி..

ரவிதேஜா கன்னமணி வம்சத்தினை சேர்ந்தவர். அவர், மணமகள் போன்று வண்ணநிற சேலை மற்றும் காதணிகள், நெக்லெஸ் உள்ளிட்ட தங்க நகைகளை அணிந்து கொள்கிறார்.

இதேபோன்று மற்றொருபுறம் மணமகள், மணமகன் போன்று வேட்டி மற்றும் சட்டை அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் இருவரும் குதிரை வண்டியில் ஏறி சென்று குடும்ப குல தெய்வங்களை வணங்கி பூஜை செய்துள்ளனர்.

பாராட்டு

அதன்பின்னர் கன்னமணி ரவிதேஜா கிராமத்தினை சுற்றி குதிரை வண்டியில் வலம் வந்துள்ளார். இதனை அருகில் உள்ள கிராமத்தில் இருந்தும் வந்த மக்கள் கண்டுகளித்தனர்.

இன்றைக்கும் மரபினை கடைப்பிடித்து வரும் அந்த குடும்பத்தினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். குடும்ப நலனுக்காக அவர்கள் இதனை விரும்பி கடைப்பிடித்து வருகின்றனர்.

காரணம் என்ன?

இதுபற்றி அந்த சமூகத்தினர் கூறும்பொழுது, ‘‘ராணி ருத்ரமாதேவி எப்பொழுதும் ஆண் போல் வேடமணிந்து கொண்டு இருப்பார். அவர் கோவில்களுக்கு அந்த உடையிலேயே செல்வார். இந்த மரபினை எங்கள் சமூகமும் திருமணத்தின்பொழுது கடைப்பிடித்து வருகிறார்கள்’’ என கூறினார்கள்.