அனைத்து பக்தர்களும் சமம்தான்…. சபரிமலை ஐயப்பன் கோயிலில் “சிறப்பு தரிசனம் ரத்து”
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அன்னதானத்துக்கு ரூ.1000 நன்கொடை அளிப்பவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட, சிறப்பு தரிசனம் வசதியை ரத்து செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
அனைத்து பக்தர்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும், சமமான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட வாரியத்தலைவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
இதற்கு முன்பு இருந்த வாரியம், அன்னதான திட்டத்துக்கு நிதி திரட்ட வேண்டும் என்பதற்காக, சிறப்பு தரிசனம் வசதியை வழங்கி வந்தது. இந்த வசதியால் சாதாரண பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக பல புகார்கள் வந்ததையடுத்து, அதை நீக்கி இப்போது புதிய வாரியம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் புதிய தலைவர் ஏ.பத்மகுமார் கூறுகையில், “ இதற்கு முன்பு இருந்த வாரியம் செயல்படுத்திய நன்கொடை அளிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தரிசனம் வசதியை நாங்கள் முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறோம். இதற்கு முன் அன்னதானத் தி்்ட்டத்தில் பணம் செலுத்தி, சிறப்பு தரிசனத்துக்கான ரசீது வைத்து இருக்கும் பக்தர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இனிவரும்
காலங்களில் அன்னதானத் திட்டத்தில் நன்கொடை அளித்தால் சிறப்பு தரிசன வசதி கிடையாது.
வி.ஐ.பி. கலாச்சாரம், பணத்துக்காக சிறப்பு தரிசனம் முறை ஆகியவற்றை ஒழிக்க மாநில அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அன்னதானத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன. அது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
இந்த ஆண்டு சபரிமலை சீசன் தொடங்கி 6-வது நாளில் ரூ.7 கோடி வருவாய் கூடுதலாகக் கிடைத்துள்ளது. இது கடந்தஆண்டு 6-வது நாளுக்குள் ரூ.16.45 கோடிவருவாய் கிடைத்து இருந்தது, இந்த ஆண்டு ரூ.23.76 கோடி வருவாய் வந்துள்ளது. வாரியத்தின் நிர்வாகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக ஊழல் ஒழிப்புக்குழு ஒன்று அமைத்து கண்காணிக்கப்படும் ” என்று தெரிவித்தார்.