பெட்ரோல் ரூ.6 - டீசல் ரூ.5 விலை குறைக்க ரெடி!! முதல்வர் அதிரடி...
பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க தயாராக இருக்கிறோம் என்றும், அதனை ஈடுகட்ட மத்திய அரசு தயாராக இருக்கிறதா? என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியதாவது: மாநிலங்களிடம், பெட்ரேல் - டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் மத்திய அரசு ஏற்கனவே 11 லட்சம் கோடி ரூபாயை சேர்த்து வைத்திருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததன் காரணமாக, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்காமல் அதிலிருந்து வந்த பணம் 11 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருக்கிறது. மத்திய அரசு, அதில் இருந்து பணத்தைக் கொடுத்து சரி செய்ய வேண்டுமே தவிர, மாநிலங்களை வற்புறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தோடு ஒப்புடும்போது, தமிழகத்தில் பெட்ரோலுக்கு 34 சதவிகித வரியும், டீசலுக்கு 32 சதவிகித வரியும், புதுச்சேரியில் பெட்ரோலுக்கு 29 சதவிகித வரியும், டீசலுகிகு 15.2 சதவிகித வரியும் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 88 ரூபாய். புதுவையில் 82 ரூபாய். ஏற்கனவே புதுச்சேரியில் வாட் வரியை குறைத்திருக்கிறோம்.
இனிமேல் குறைத்தால், அதனை ஈடுகட்டுவதற்கு மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும். அதாவது அந்த பணத்தை மத்திய அரசு எங்களுக்கு கொடுக்க தயாராக இருக்கிறதா? இதனை மத்திய நிதி அமைச்சர் சொல்ல வேண்டும்
ஏன் என்றால், ஏற்கனவே மத்திய அரசிடம் இருக்கும் பணத்தை அதனை மக்களுக்கு கொடுக்க வேண்டும். அல்லது பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்க வேண்டும்.
மத்திய அரசு ஈடு செய்தால், பெட்ரேல் - டீசல் விலையைக் குறைக்கத் தயார். மத்திய அரசுக்கு எவ்வளவு தொகை கொடுக்க தயாராக இருக்கிறதோ அதற்கேற்றார்போல் விலையை குறைப்போம்.
புதுச்சேரியில் பெட்ரோல் - டீசல் விலையை இன்னும் குறைப்பதற்கு தயாராக இருக்கிறோம். அதை ஈடு செய்வதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறதா? மற்ற மாநிலங்களைவிட புதுவையில் வரி குறைவாக இருப்பதனால், பெட்ரோல் - டீசல் விலை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.