ஊழலைப் பற்றி பேசும்போது உங்களது கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள் என ராகுல் காந்தி பேச்சுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிலடி கொடுத்துள்ளார்
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதம் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இந்த விவாதத்தின் மீது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று பேசினார்.
அப்போது, மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடியை தாக்கி பேசிய அவர், பிரதமர் மோடி ஒரு முறை கூட அங்கு செல்லவில்லை. பிரதமர் மோடி மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதவில்லை. மணிப்பூரை பிரதமர் மோடி இரண்டாக பிரித்துள்ளார். தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூர் இன்று பிரிந்து நிற்கிறது என்றார்.
இந்தியா நமது மக்களின் குரல். மணிப்பூரில் அந்தக் குரலைக் கொன்றீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றீர்கள். இந்தியாவை கொலை செய்து விட்டீர்கள் எனவும் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.
இந்தியாவை கொலை செய்து விட்டீர்கள் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பாஜக எம்பிக்கள் மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வகையில், ராகுலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, ‘மணிப்பூர் பிரிக்கப்படவில்லை. அது இந்தியாவின் ஒரு பகுதி. அதனை பிரிக்க முடியாது.’ என்றார்.
'பயப்படாதீங்க அதானி பற்றி பேச மாட்டேன்': நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் ராகுல் மாஸ் பேச்சு!
தொடர்ந்து பேசிய ஸ்மிருதி இராணி, “அவர் பாரத மாதாவின் மரணத்தைப் பற்றிப் பேசினார், காங்கிரஸ் தலைவர்கள் கைதட்டினர். நீங்கள் இந்தியா கிடையாது இந்தியா ஊழலுக்கு எதிரானது. வாரிசு அரசியலுக்கு எதிரானது. ஊழலைப் பற்றி பேசும்போது உங்களது கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள். இந்தியா ஊழலை நம்பவில்லை, வாரிசு அரசியலை நம்பவில்லை.
“காஷ்மீர் பண்டிட் - கிரிஜா திக்கு - காஷ்மீரில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இதை ஒரு திரைப்படத்தில் காட்டியபோது, சில காங்கிரஸ் தலைவர்கள் இதை பிரச்சாரம் என்று கூறினர். அதே கட்சித் தலைவர்கள் இன்று நீதியைப் பற்றி பேசுகிறார்கள்.” எனவும் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.
ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து காங்கிரஸ் மவுனம் சாதிக்கிறது என்று குற்றம் சாட்டிய ஸ்மிருதி இராணி, “ராஜஸ்தானில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் பில்வாரா. 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உடலை வெட்டி, உலைகளில் வீசியெறிந்தனர். மேற்குவங்கத்திலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கின்றன. ஆனால் அதுபற்றி எதுவும் பேசப்படுவதில்லை.” என்றும் நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இராணி பேசினார்.
