நெல்லூர் கார் விபத்து: 6 பேர் பலி

நெல்லூர் மாவட்டம் கோவூர் மண்டலம் அருகே மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் ஐந்து மருத்துவ மாணவர்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று இரவு, நெல்லூர் நாராயணா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் ஆறு பேர் ஒரு காரில் புச்சி பாளையம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அங்கு நண்பரின் தங்கையின் நிச்சயதார்த்த விழாவில் அவர்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக, அவர்கள் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ஒரு வீட்டின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வீட்டின் உரிமையாளரான 50 வயது வெங்கட ரமணய்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காரில் பயணித்த ஐந்து மருத்துவ மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஜீவன், விக்னேஷ், நரேஷ், அபிஷாய் மற்றும் அபிஷேக் ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்தனர். மற்றொரு மாணவரான மௌனித் ரெட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நண்பனின் இல்லத்தில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிய இளம் உயிர்கள் இப்படி விபத்தில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து அதிவேகத்தின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோகமான சம்பவம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.