சித்தராமையா? டி.கே.சிவக்குமார்? கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்? காங்கிரஸ் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவும், துணை முதல்வராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாரும் பதவியேற்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியால் நியமிக்கப்பட்ட காங்கிரஸ் பார்வையாளர்கள் உள்ளிட்ட மத்திய தலைமையுடன் கலந்துரையாடி புதிய கர்நாடக முதல்வரின் பெயர்களை முறைப்படி அறிவிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : டி.கே. சிவகுமாருக்குப் பிறந்தநாள்... பரிசாக முதல்வர் பதவியை வழங்குமா காங்கிரஸ்?
சித்தராமையா மற்றும் சிவக்குமார் இருவரும் இன்று டெல்லிக்கு ச்ன்று காங்கிரஸ் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளனர். எனினும், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின் பேரில் மட்டுமே கர்நாடகா தலைவர்கள் இருவரும் டெல்லிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கர்நாடகாவின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அதிக நேரம் எடுக்க மாட்டார் என்றும், கர்நாடகாவின் அடுத்த முதல்வரின் பெயரை மிக விரைவில் அறிவிப்பார் என்றும் கூறினார்.
கர்நாடக முதல்வரின் பெயரை தேர்வு செய்ய கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானத்தை காங்கிரஸ் சட்டமன்ற குழு,நிறைவேற்றியது.
பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய கூட்டம் நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 135 எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, கட்சித் தலைவர்கள் ஜிதேந்திர சிங், தீபக் பபாரியா ஆகியோர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சித்தராமையா, டி.கே.சிவகுமார், கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
கர்நாடக முதல்வராக சித்தராமையா ஏன் ?
கர்நாடகாவில் காங்கிரஸ்வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலை காங்கிரஸ் எதிர்நோக்கி உள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும் சித்தராமையாவின் வெகுஜன செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் விரும்புகிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு சித்தராமையாவை தனது முக்கிய முகமாகவும், சிவகுமாரை மேலாளராக காட்டவும் கட்சி விரும்புகிறது.
டி.கே. சிவாக்குமாருக்கு ஏன் துணை முதல்வர் பதவி ?
கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு அடுத்தபடியாக மிகுந்த செல்வாக்கு உள்ள நபராக டி.கே.சிவக்குமார் இருக்கிறார். தற்போது கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள டி.கே. சிவக்குமார், கட்சிக்காக தீவிரமாக உழைக்கும் நபராகவும் இருந்துள்ளார். கட்சியின் நெருக்கடி காலங்களில் கட்சிக்கு துணையாக நின்றுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியாகவும் டி.கே. சிவக்குமார் இருந்து வருகிறார். சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவராகவும் இருக்கிறார். அந்த வகையில் ஊழல் வழக்கில் சிவக்குமார் சிறையில் இருந்த போது சோனியா காந்தி அவரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
லிங்காயத், ஒக்கலிக்கர் சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. அதன் படி லிங்காயத் சமூகத்தை சேர்ந்த சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவியும், ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த சிவக்குமாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : மகனின் உடலை 200 கி.மீ பையில் வைத்து எடுத்து சென்ற நபர்.. ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த முடியாததால் நடந்த அவலம்