அதிர்ச்சிமேல் அதிர்ச்சி கொடுக்கும் எஸ்.பி.ஐ வங்கி... ரூ.25 கட்டணமும், கூடுதலாக ஜி.எஸ்.டி. வரியும்! எதற்கு? எப்படி?
நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி, ஐ.எம்.பி.எஸ். மூலம் செய்யப்படும் விரைவு பணப் பரிமாற்றத்துக்கான கட்டணத்தை உயர்த்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுதும் மறைமுக வரிகள் நீக்கப்பட்டு ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்துள்ளது. ஜி.எஸ்.டி.வரியில் சேவைக்கட்டணம் 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வங்கிச்சேவை, நிதிச்சேவைகளில் இம்மாதம் 1-ந்தேதியில் இருந்து எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் வங்கி, நேற்று திடீரென கட்டண உயர்வை அறிவித்துளஅளது. அதாவது, ஐ.எம்.பி.எஸ். எனப்படும் உடனடிய பணப்பரிமாற்றத்துக்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதன்படி ரூ. ஆயிரம் வரை ஐ.எம்.பி.எஸ். மூலம் பரிமாற்றம் செய்தால், கட்டணம் ஏதும் விதிக்கப்படாது. அதேசமயம், ரூ. ஆயிரத்துக்கு மேல் ரூ. ஒரு லட்சம் வரையில் ரூ. 5 கட்டணமும், ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்துவிதிக்கப்படும்.
அதேபோல, ரூ. ஒரு லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம் வரை ரூ.15 கட்டணமும் ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஜூன் மாதத்தில் இருந்து பல புதியவிதிமுறைகள் ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களை திக்குமுக்காடச் செய்து வருகிறது. மெட்ரோ நகரங்களில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்கமுடியும் என்றும் மற்ற வங்கிகளில் 3 முறையும் எனக் குறைத்தது. இதுவோ மெட்ரோஅல்லாத நகரங்களில் 10 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என தெரிவித்தது.
மற்றவங்கிகள் மெட்ரோ நகரங்களில் மாதத்துக்கு 8 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என அறிவித்துள்ளன. மேலும், ஸ்டேட் வங்கியின் மொபைல் வாலட்டில் இருந்துபணத்தை ஏ.டி.எம்.க்கு மாற்றி எடுத்தால், ரூ.25 கட்டணமும், கூடுதலாகஜி.எஸ்.டி. வரியும் விதிக்கப்படுகிறது.
மேலும் ஜூன் 1-ந்தேதி முதல் டெபிட்கார்டு வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது, இதுவே ரூபே டெபிட் கார்டு கட்டணமின்றி தரப்படுகிறது.