பிப்ரவரி மாதத்திற்குள் பணப்பிரச்சனை தீரும் : எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா
பிப்ரவரி மாத இறுதிக்குள், வங்கி நடைமுறைகளில் இயல்பு நிலை திரும்பும் என, பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, நாட்டில் பணப்புழக்கம் வெகுவாக குறைந்தது. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் போதிய அளவு வங்கிகளுக்கு விநியோகிக்கப்படாததால், வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள். ATM மையங்களும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கின்றன.
இந்நிலையில், ஃபிப்ரவரி மாத இறுதிக்குள், வங்கி நடைமுறைகளில் இயல்பு நிலை திரும்பும் என, பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். வங்கிகளில் பண இருப்பு அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.