பெட்ரோல், டீசல், சிலிண்டருக்கு தட்டுப்பாடா? அவசர அறிவிப்பு வெளியிட்ட அரசு.. முழு விவரம்!
பெட்ரோல், டீசல் மற்றும் LPG தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பெட்ரோல், டீசல், சிலிண்டர் தட்டுப்பாடா?
மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால், உலக எரிசக்தி சந்தையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும், இந்தியாவில் எரிபொருள் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. மேலும், முக்கிய துறைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
"தற்போதைய புவிசார் அரசியல் சூழலிலும், வீட்டு உபயோகத்துக்கான LPG, குழாய்வழி சமையல் எரிவாயு (PNG) மற்றும் வாகனங்களுக்கான CNG ஆகியவற்றின் விநியோகம் 100% உறுதி செய்யப்பட்டுள்ளது," என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.மேலும், மக்கள் பதற்றத்தில் எரிபொருட்களை வாங்க வேண்டாம் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம்
"பெட்ரோல், டீசல் மற்றும் LPG தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. எனவே, பொதுமக்கள் பதற்றத்தில் இவற்றை வாங்க வேண்டாம்," என்று கூறியுள்ள மத்திய அமைச்சகம், "வதந்திகளை நம்ப வேண்டாம், சரியான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புங்கள்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. வீடுகளுக்கும் முக்கிய துறைகளுக்கும் LPG விநியோகம் செய்வதில் அரசு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியுள்ளது.
வீட்டு சிலிண்டர்களுக்கு முன்னுரிமை
"வீட்டு உபயோகத்துக்கான LPG விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. LPG விநியோகஸ்தர்களிடம் சிலிண்டர்களுக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை" என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தேவையைக் கட்டுப்படுத்த, LPG சிலிண்டர் புக் செய்வதற்கான கால இடைவெளியை அதிகரிப்பது மற்றும் மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பது போன்ற சில நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்துள்ளனர். "LPG மீதான அழுத்தத்தைக் குறைக்க, மண்ணெண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற மாற்று எரிபொருட்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன" என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அமைச்சகம் கூறியுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு
விநியோகத்தைப் பொறுத்தவரை, சுத்திகரிப்பு ஆலைகள் முழுத் திறனில் இயங்கி வருகின்றன. "அனைத்து சுத்திகரிப்பு ஆலைகளும் போதுமான கச்சா எண்ணெய் கையிருப்புடன் முழுத் திறனில் இயங்குகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பும் போதுமான அளவில் பராமரிக்கப்படுகிறது" என்று அமைச்சகம் மேலும் கூறியது. உலகளாவிய விலை உயர்வுகளிலிருந்து நுகர்வோரைக் காக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. "மத்திய கிழக்கு நெருக்கடியால் கச்சா எண்ணெய் விலையில் அசாதாரணமான உயர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நுகர்வோரைப் பாதுகாக்க, இந்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹10 குறைத்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PNG இணைப்புகள் அதிகரிப்பு
கூடுதலாக, எரிபொருள் மீதான ஏற்றுமதி வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன. "டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ. 55.50-லிருந்து ரூ. 23 ஆகவும், விமான எரிபொருள் (ATF) மீதான வரி ரூ. 42-லிருந்து ரூ. 33 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது," என்று அந்த அறிக்கை கூறுகிறது. "தற்போதைய புவிசார் அரசியல் சூழலால் LPG விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டாலும்," எடுக்கப்பட்ட தணிப்பு நடவடிக்கைகள் விநியோகத்தை சீராக்க உதவியுள்ளன என்று அமைச்சகம் ஒப்புக்கொண்டது.
எரிபொருள் நிர்வாகத்துடன், தூய்மையான எரிபொருட்களை நோக்கிய மாற்றத்தையும் அரசு ஊக்குவித்து வருகிறது. மார்ச் 2026 முதல், "சுமார் 5.96 லட்சம் PNG இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 8.64 லட்சமாக உயர்ந்துள்ளது," என்று கூறிய அமைச்சகம், "புதிய இணைப்புகளுக்காக சுமார் 6.66 லட்சம் வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ளனர்" என்றும் அறிவித்துள்ளது.
மொத்தத்தில் எரிபொருள் விநியோகம் சீராக இருப்பதாகவும், பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறும் அரசு வலியுறுத்தியுள்ளது. "நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பம்புகளிலும் போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளது" என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

