வாகன ஓட்டிகளுக்கு ஷாக்.. பெட்ரோல், டீசல், கேஸ் விலை 5 நாள்ல ஏறுமா? உஷார்.!
மேற்கு ஆசிய பதற்றத்தால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலைகளை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்தியாவில் விலை உயர்வு நெருங்குது
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் பதற்றம் உலக எண்ணெய் சந்தையை அதிரவைத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு எல்.பி.ஜி சிலிண்டர் விலைகளை திருத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அதிகாரப்பூர்வ தகவல்களை மேற்கோள் காட்டிய செய்திகளின் படி, பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.40 முதல் ரூ.50 வரை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் ஏற்றம்
இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், கடந்த சில ஆண்டுகளாக நிலைத்திருந்த எரிபொருள் விலையில் இது முதல் பெரிய உயர்வாக அமையும். 2022க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போதைய சூழல் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் செலவினம் நேரடியாக பாதிக்கப்படும் என்ற கவலையும் உருவாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை ஏற்றம்
விலை உயர்வுக்கு முக்கிய காரணம் உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றமே. மேற்கு ஆசியப் பகுதிகளில் நிலவும் போர் சூழ்நிலை, எண்ணெய் உற்பத்தி மற்றும் சப்ளையில் ஏற்படும் அச்சம் அதிகரித்துள்ளது. கடல் மார்க்க போக்குவரத்து பாதிப்பு, கப்பல் செலவில் உயர்வு, நீண்டகால அரசியல் பதற்றம் போன்றவை சந்தையை மேலும் சிக்கலாக்கி, விலையை வேகமாக உயர்த்தியுள்ளன.
பெட்ரோல், டீசல் விலை மாற்றம்
இந்நிலையில், இந்திய எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் அதிக செலவில் கச்சா எண்ணெயை வாங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஆனால், சில்லறை விலை மாற்றமின்றி தொடர்ந்ததால், அதன் நஷ்டம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், மானியம் அல்லது வரி குறைப்புகள் மூலம் சுமையை தாங்குவது அரசுக்கு சவாலாக வருகிறது.
உலக சந்தை நிலவரம்
இதனால், அடுத்த 5 முதல் 7 நாட்களில் இறுதி முடிவு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் அரசு, நிறுவனங்களின் நஷ்டத்தையும், மக்களுக்கு ஏற்படும் பணவீக்க தாக்கத்தையும் சமநிலைப்படுத்தும் தீர்வை தேடி வருகிறது. எரிபொருள் விலை உயர்வு எப்போது, எவ்வளவு என்ற முடிவு விரைவில் வெளியாகும் என்பதால், பொதுமக்கள் கவனமாக எதிர்பார்த்து வருகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

