வடமாநிலங்களில் உப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிலோ உப்பு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் உப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் சில மாதங்களுக்கு உப்பு கிடைக்காது என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் பீதியடைந்த மக்கள் உப்பு வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுத்தனர்.
மக்கள் அதிகளவு உப்பு வாங்குவதை அறிந்த சில வியாபாரிகள், ஒரு கிலோ உப்பை 200 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ, அலகாபாத், மொரதாபாத் ஆகிய இடங்களில் அதிக விலைக்கு உப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Rampur பகுதியில் வதந்தியை பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே வட மாநிலங்களில் உப்பு தட்டுப்பாடு ஏதும் இல்லை எனவும், உப்பு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மத்திய உணவுத் துறை அமைச்சர் திரு. ராம் விலாஸ் பாஸ்வான் விளக்கமளித்துள்ளார். மேலும், வதந்திகளை பரப்புவோர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
