பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் ஜோதி..பக்திப் பரவசத்துடன் சரண கோஷமிட்ட பக்தர்கள்…

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி மாலை நடை திறக்கப்பட்டது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வந்தனர்.கடந்த மாதம் 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றதையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது.

இதனைத் தொடந்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கூட்டம், கூட்டமாக இருமுடி கட்டிவந்து, அய்யப்பனை வழிபட்டனர்.

இதையடுத்து பந்தளம் சாஸ்தா கோவிலில் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி ஊர்வலம் நேற்று லாகா சத்திரம் வந்து சேர்ந்தது.

அங்கிருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணி அளவில் சரம் குத்தி வந்தடைந்தது.

அதைத்தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல் சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் திருவாபரண பெட்டிகளை பெற்றுக் கொண்டார்கள்.

பின்னர் 18-ம்படி வழியாக கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

அப்போது 6.45 மணிக்கு 3 முறை பொன்னம்பல மேட்டில் அய்யப்பன், ஜோதி வடிவில் காட்சி தந்தார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் அய்யப்ப சரணம் கோஷமிட்டனர்.

மகரஜோதி தரிசனத்தையொட்டி சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மகர ஜோதியை காண பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்து மகர ஜோதி தரிசனத்தை கண்டனர்.