“கிளம்பியது புதிய சர்ச்சை” தடையை மீறி சபரிமலைக்கு செல்வது உறுதி - திருப்தி தேசாய் ‘அதிரடி’ அறிவிப்பு
தடையை மீறி, வரும் 25ம் தேதிக்குள் சபரிமலைக்கு செல்வது உறுதி என பெண்ணிய செயல்பாட்டாளர் திருப்தி தேசாய் அறிவித்துள்ளார்.
மகளிர் நல ஆர்வலரான திருப்தி தேசாய், மகாராஷ்டிர மாநிலம், சனிசிங்னாபூர் கோயில் கருவறை, மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவின் கருவறைக்குள் பெண்கள் நுழைய அனுமதிக்கக் கோரி சட்ட ரீதியில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தற்போது, கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை நடத்தி வருகிறேன்.
யார் தடுத்தாலும் வரும் 25ம் தேதிக்குள் சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயிலுக்குள் செல்வது உறுதி. யாருக்கும் பயப்பட தேவையில்லை. என்னுடன் மும்பை மற்றும் கேரளாவை சேர்ந்த 100 ஆதரவாளர்களும் இருப்பார்கள். சபரிமலைக்கு அஹிம்சை வழியில் செல்ல தீர்மானித்துள்ளேன். நான் செல்வதால் சட்டம் ஒழுங்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் திருப்தி தேசாயை சபரிமலைக்குள் அனுமதிக்க முடியாது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானமும் கேரள அரசும் தெரிவித்துள்ளது. சபரிமலையில், பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.