பல ஆண்டுகளாக அரிசி உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த சீனாவை விஞ்சி, இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி நாடாக உருவெடுத்துள்ளது. 150.18 மில்லியன் டன் உற்பத்தியை எட்டியுள்ள இந்தியா, 184 புதிய பயிர் ரகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அரிசி உற்பத்தியில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த சீனாவை விஞ்சி, இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி நாடாக உருவெடுத்துள்ளதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வரலாற்றுச் சாதனை

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், இந்தியாவின் அரிசி உற்பத்தி 150.18 மில்லியன் டன்களை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார். இது சீனாவின் உற்பத்தி அளவான 145.28 மில்லியன் டன்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

"உணவுப் பற்றாக்குறை இருந்த ஒரு காலத்தில் இருந்து, இன்று உலகுக்கே உணவு வழங்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது. அதிக மகசூல் தரும் விதைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம்," என அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

184 புதிய பயிர் ரகங்கள்

இந்த மைல்கல் சாதனையைத் தொடர்ந்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) உருவாக்கிய 25 பயிர்களின் 184 புதிய ரகங்களை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

இதில் 122 தானிய வகைகள், 24 பருத்தி ரகங்கள், 13 எண்ணெய் வித்துக்கள், 11 கால்நடை தீவனப் பயிர்கள் மற்றும் 6 பருப்பு வகைகள் அடங்கும். வறட்சி, மண் உவர்ப்பு மற்றும் பருவநிலை மாற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய வகையில் இந்த விதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ரகங்கள் விவசாயிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

11 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி

கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் (பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில்) 3,236 அதிக மகசூல் தரும் ரகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது 1969 முதல் 2014 வரையிலான நீண்ட காலப்பகுதியுடன் (3,969 ரகங்கள்) ஒப்பிடுகையில் மிக வேகமான வளர்ச்சியாகும்.

தற்போது அரிசி உற்பத்தியில் தற்சார்பு அடைந்துள்ள நிலையில், இனி வரும் காலங்களில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் இந்தியா தன்னிறைவு பெற விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.