சபரிமலை விவகாரம்... அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...!
சபரிமலையில் பெண்கள் அனுமதியை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கத்தின் சீராய்வு மனுவை உடனே விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் பெண்கள் அனுமதியை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கத்தின் சீராய்வு மனுவை உடனே விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மனுவை உடனே விசாரிக்க தலைமை நீதிபதி முன் மனுதாரர் ஷைலஜா முறையிட்டார். ஆனால் தலைமை நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கூறியுள்ளார்.
முன்னதாக சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களையும் அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஆண்களைப் போல, அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் கேரள அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், கேரளாவில் பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
முதலமைச்சர் பினராயி விஜயனின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் பலர் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கோரி பேரணி நடத்தினர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும், நேற்று விளக்கு ஏந்தி, பேரணி நடத்தப்பட்டது.
இந்நிலையில் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்க தலைவர் ஷைலஜா விஜயன் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிடப்பட்டது. ஆனால் சீராய்வு மனுவை உடனே விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.