சபரிமலை பெண்களுக்கு அனுமதி வழக்கில் நாளை தீர்ப்பு.... கேரளாவில் உச்சக்கட்ட பரபரப்பு..!
சபரிமலை கோவிலில் அனைத்து பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்ததை எதிர்த்து தாக்கல் செய்த சீராய்வு மனு மீது நாளை காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் பிரசித்திபெற்ற ஆன்மீக தலமாக திகழ்ந்து வருகிறது. சபரிமலை கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. காலம், காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த ஐதீகத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு வயது வித்தியாசம் இன்றி அனைத்து பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் குதித்தனர். மேலும், உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து சபரிமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இளம்பெண்கள் சென்றனர். அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் சபரிமலையே போராட்டக்களமாக மாறியது.
சபரிமலை கோவிலில் அனைத்து பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனால் அதற்கு முன்பாக சபரிமலை விவகாரம் தொடர்பான தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்ததை எதிர்த்து தாக்கல் செய்த சீராய்வு மனு மீது நாளை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் கேரளாவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ரஃபேல் வழக்கு, மோடியை திருடன் என விமர்சித்தது தொடர்பாக வழக்கிலும் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.