இந்தியாவில் வசிக்கும் ரஷ்யப் பெண்மணி போலினா அக்ரவால், இந்தியாவை விட்டு வெளியேற மறுத்து, இந்திய ராணுவம் மற்றும் பிரதமர் மோடியைப் பாராட்டியுள்ளார். இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு மற்றும் தியாகத்தைப் போற்றும் அவரது வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ரஷ்யாவைச் சேர்ந்த போலினா அக்ரவால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவும் காலகட்டத்திலும் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறியுள்ளார்.

தற்போது ஹரியானா மாநிலம் குர்கானில் வசித்து வரும் அவர், இந்திய ராணுவம் மற்றும் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை பாராட்டி வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

View post on Instagram

அந்த வீடியோவில் போலினா பேசியதாவது: "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு நாட்கள் போர் நடந்தபோது, ரஷ்யாவில் உள்ள எனது பாட்டி, என்னை ரஷ்யாவுக்கு திரும்பி வருமாறு அழைத்தார். ஆனால், 'இதுதான் எனது தாய் வீடு, நான் இங்கேயே இருப்பேன்' என்று அவரிடம் கூறிவிட்டேன்.

இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் இரவு பகலாக விழித்திருந்து நாட்டை காக்கின்றனர். தேசத்துக்காக தங்களது உயிரை அர்ப்பணித்த ராணுவ வீரர்களுக்கு எனது வணக்கம். அவர்கள் எல்லையில் காவல் காப்பதால்தான், நாட்டு மக்கள் இங்கு இரவில் நிம்மதியாக உறங்க முடிகிறது.

ரஷ்யா வழங்கிய அதிநவீன ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை இந்தியா கொண்டுள்ளது. எதிரி நாட்டின் ட்ரோன்கள், ஜெட் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை சமாளிக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளது.

பதற்றமான சூழலில் இந்திய ராணுவம் தயாராக இருந்ததை பாராட்ட வேண்டும். சுயநலமின்றி நாட்டுக்காக போரிடும் ராணுவ வீரர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். துணிச்சலான முடிவுகளை எடுத்த பிரதமர் மோடியையும் பாராட்டுகிறேன்."

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 1,22,000-க்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. போலினாவின் தேசப்பற்று மற்றும் உருக்கமான பேச்சு பலரையும் கவர்ந்துள்ளது.