ஆர்டிஐ வரம்புக்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வருமா? 10 ஆண்டுகளுக்குப்பின் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு....
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு நாளை 2 மணிக்குத் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்தைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் (ஆர்டிஐ) கொண்டு வரக்கோரி சமூக ஆர்வலர் எஸ்.சி.அகர்வால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மனுதாரருக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார்.கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
88 பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், எஸ்.முரளிதர் ஆகியோர் கொண்ட அமர்வு வழங்கியது.
அதன்பின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கடந்த 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றச் செயலாளர், நீதிமன்றத்தின் தகவல் அதிகாரி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு கடந்த 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இன்று தீ்ர்ப்பு வழங்கப்பட உள்ளது