பிரிட்ஜிங் சவுத்! தென் மாநிலங்களை இணைக்க ஆர்.எஸ்.எஸ். புதிய திட்டம்!
டெல்லியில் டிசம்பர் 12ஆம் தேதி 'பிரிட்ஜிங் சவுத்' தொடக்க விழா நடைபெறும் என்றும் அதில் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ள இருப்பதாகவும் நந்தகுமார் கூறியுள்ளார்.
![RSS to launch campaign 'Bridging South' to counter 'Cutting South' on Dec 12: J Nandakumar sgb RSS to launch campaign 'Bridging South' to counter 'Cutting South' on Dec 12: J Nandakumar sgb](https://static-ai.asianetnews.com/images/01hgqeve0kyavc1j9av5ac5b9k/download--2-_363x203xt.jpg)
கேரளாவில் தொடங்கப்பட்ட 'கட்டிங் சவுத்' நிகழ்ச்சிக்குப் போட்டியாக ஆர்எஸ்எஸ் டிசம்பர் 12ஆம் தேதி அன்று 'பிரிட்ஜிங் சவுத்' என்ற பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது என பிரஜ்னா பிரவாவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் ஆர்எஸ்எஸ் உறுப்பினருமான ஜெ. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த நந்தகுமார், "டெல்லியில் டிசம்பர் 12ஆம் தேதி 'பிரிட்ஜிங் சவுத்' தொடக்க விழா நடைபெறும். 'கட்டிங் சவுத்' என்ற நிகழ்வின் பின்னணியில் உள்ள சித்தாந்தத்தை முறியடிக்கும் நிகழ்வாக இது இருக்கும். பாரதம் வடக்கிலிருந்து தெற்கு வரை ஒன்றாகவே உள்ளது" என்று கூறியிருக்கிறார்.
"வேதங்களில் இமயம் முதல் சமுத்திரம் வரை பாரதம் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கலாச்சார ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் நாம் ஒன்றுதான். ஆனால் சமீபகாலமாக பிரிவினை மனப்பான்மை கொண்டவர்கள் பாரதத்தை பிளவுபடுத்த முயற்சி செய்கின்றனர்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'கட்டிங் சவுத்' நிகழ்வின் பின்னணியில் சில பொய்ப் பிரச்சாரங்கள் இருப்பதாகவும் நந்தகுமார் தெரிவித்தார். "இது நிச்சயமாக சாமானிய மக்களுக்குளைப் பிளவுபடுத்துவதாகும்" என்று கூறிய நந்தகுமார், "டெல்லி தென் மாநிலங்களைப் புறக்கணிக்கிறது, கேரளாவும் தமிழ்நாடும் பிற மாநிலங்களைவிட அதிக வருவாய் பங்களிப்பை வழங்குகின்றன, இருந்தும் குறைந்த வளர்ச்சியையே பெறுகின்றன தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன" என்றார்.
பிரிட்ஜிங் சவுத் நிகழ்வில் பங்கேற்கும் முக்கியப் பிரமுகர்கள் குறித்த கேள்விக்குப் பதில் கூறிய அவர், "பாதுகாப்புத்துறை அமைச்சர் வருவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜீவ் சந்திரசேகர், வி. முரளிதரன் மற்றும் பலர் பங்கேற்க உள்ளனர்" என்று நந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.
தென்னிந்தியா மற்றும் குளோபல் சவுத் நாடுகளை மையமாக வைத்து நல்ல ஊடகங்களைக் கொண்டாடும் விழாவாக 'கட்டிங் சவுத்' நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இந்த விழாவை கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். ஆறு மாதங்கள் நீடிக்கும் இந்த ஊடகத் திருவிழாவை கேரளா மீடியா அகாடமி பல்வேறு ஊடக நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகிறது.